வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்-அதிகாரிகள் அதிரடி

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டில் வெளிமாநிலத்திற்கு மினி லோடுவேனில் அரிசி கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனுக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வாகனத்தில்  3 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு கடத்த தயார் நிலையில் இருந்ததை  கைப்பற்றினர்.

மேலும் மோகன் என்பவரின் வீட்டின் பூட்டை  கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலையில்  உடைத்து  சோதனை செய்ததில், மேலும் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மொத்தமாக 4 டன் ரேஷன் அரிசி, மற்றும் கடத்த பயன்படுத்திய மினிவேன், இருசக்கர வாகனம் ஒன்று என அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர்   நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். அப்போது, திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர் சம்பத், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன்  ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், தப்பி ஓடிய நபர்களை ஜோலார்பேட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: