விழுப்புரம் நகராட்சியில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி-ஆட்சியர் மோகன் துவக்கி வைத்தார்

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியர் மோகன் துவக்கிவைத்தார். அப்போது அவர்கூறுகையில், தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1ம்தேதி முதல் 7ம்தேதி வரை கொரோனா நோய்தடுப்பு வழிமுறைகள் குறித்து பல்வேறுநிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூன்றாம் நாளான நேற்று விழுப்புரம் நகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்வகையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் ஒவ்வொரு வார்டுக்கு ஒரு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் உள்ள தெருக்கள், வீடுகள், வணிகப்பகுதிகளுக்கு நேரில்சென்று கொரோனா தடுப்பூசி போடப்படாமல் உள்ள விடுபட்ட நபர்களை கண்டறிந்து உரிய விவரங்களை பெற்று தடுப்பூசி செலுத்தப்படும்.

குடும்பஉறுப்பினர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட விவரத்தினை வைத்து, கோவிட்19 தடுப்பூசி போர்ட்டல் மூலம் உறுதிசெய்வதுடன், 45 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரம் மற்றும் எண்ணிக்கை விவரங்களையும், கர்ப்பிணி தாய்மார்கள் தொற்றாநோயாளிகள் தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரம் மற்றும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வார்டு குழு பொறுப்பாளர் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

மேலும், துப்புரவு ஆய்வாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளை கண்காணித்து தினசரி நகர்நல அலுவலருக்கு அதற்கான தினசரிஅறிக்கை படிவத்தில் உரிய களவிவரத்தினை பூர்த்திசெய்து தினசரிமாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார். நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: