திருத்தணி பைனான்ஸ் அதிபர்- மனைவி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலையில் வசித்தவர் சஞ்சீவிரெட்டி (68). பாமக பிரமுகரான இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்தார். இவரின் மனைவி மாலா (55). ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்துவரும் இவர்களின் பேத்தி லோச்சி (21) அடிக்கடி தனது தாத்தா  சஞ்சீவிரெட்டியுடன் பேசுவாராம். கடந்த கடந்த 29ம் தேதி தாத்தா சஞ்சீவி ரெட்டி செல்போனுக்கு தொடர்புகொண்டபோது போனை எடுக்கவில்லை. இதையடுத்து பாலு, தனது அண்ணனை பார்க்க வந்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.

அக்கம்பக்கம் விசாரித்தும் அவர்களை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதுபற்றி திருத்தணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் செல்போன் டவரை வைத்து விசாரித்தபோது சஞ்சீவிரெட்டி கடைசியாக புத்தூர் ராமசமுத்திரம் மண்டல பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பேசியிருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் கொடுத்த தகவல்படி, ஆந்திர போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தபோது சஞ்சீவி ரெட்டியிடம் அவரது தங்கை மகன் ரஞ்சித்குமார் (28) கடைசியாக பேசியிருப்பது பதிவாகியிருந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரித்தபோது திருத்தணி சிங்கராஜபுரத்தை சேர்ந்த பால் வியாபாரி விமல்ராஜ் என்பவருடன் சேர்ந்து தனது தாய்மாமன் சஞ்சீவி ரெட்டி, அத்தை ஆகியோரை கொலை செய்ததை ரஞ்சித்குமார் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்று கோயிலுக்கு போகலாம் என்று மாமாவை அழைத்துக்கொண்டு ரஞ்சித்குமார் ஆந்திராவுக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது அத்தைக்கு போன் செய்து, மாமாவுக்கு விபத்து நடந்துவிட்டது எனவே உடனடியாக வாருங்கள் என்று அவரையும் அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர் ஆந்திராவில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றதும் இரண்டுபேரையும் கொலை செய்து சடலத்தை அங்கு புதைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாததுபோல் திருத்தணிக்கு வந்து, உறவினர்களுடன் சகஜமாக பேசியதுடன் அவர்களுடன் சேர்ந்து மாமா, அத்தை ஆகியோரை தேடுவதுபோல் நடித்துள்ளார். வீட்டுக்கு அனைவரும் சென்றபோதும் போலீசில் புகார் கொடுக்க சென்றபோதும் அவர்களுடன் ரஞ்சித்குமாரும் சென்றுள்ளார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

செல்போன் டவரை வைத்து விசாரித்தபோதுதான் ரஞ்சித்குமார் சிக்கிக்கொண்டார். இதனிடையே ரஞ்சித்குமாருடன் சேர்ந்து கொலை செய்வதற்கு உதவியாக இருந்த மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சித்குமாரின் தந்தை அதிமுக முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: