அதிமுக ஆட்சியில் இல்லாத கண்மாயில் தடுப்பணை கட்டியதாக மோசடி : மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக நீதிபதிகள் காட்டம்!!

மதுரை : சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் கட்டப்படாத தடுப்பணைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் நடராஜபுரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 4.6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீரையன் கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக அரசு இணையதளத்தில் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர், வீரையன் கண்மாய் என்ற பெயரில் எந்த கண்மாயும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து விசாரித்த போது, பனங்குடி பஞ்சாயத்து எழுத்தர் முறைகேட்டில் ஈடுபட்டு தடுப்பணை கட்டுவதற்கான பணத்தை முறைகேடு செய்துள்ளது தெரியவந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதிகள் சஞ்சீவ் பேனர்ஜி, ஆனந்தி அமர்வு வழக்கில் பொதுமக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.கண்மாயில் தடுப்பணை கட்டப்பட்டதாக கூறி தாக்கல் செய்த கணக்குகளை ஆய்வு செய்யவும் தடுப்பணையை நேரடியாக சென்று ஆய்விட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கவும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவரது அறிக்கையின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Related Stories: