வேதாரண்யத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி-விவசாயிகள் கவலை

வேதாரண்யம் : வேதாரண்யத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம், வெள்ளிகிடங்கு, வண்டுவாஞ்சேரி, அண்ணாபேட்டை, கரியாப்பட்டினம், வடமழை, மணக்காடு, புஷ்பவனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் தற்போது இரண்டு ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு நன்றாக காய்த்து வருகிறது.

இங்கு விளையும் தேங்காய்களில் வேதாரண்யம் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தேங்காய் பருப்பு அதிக திராட்சையாக உள்ளதால் எண்ணை செக்குக்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது தேங்காய் விலை கடும் கிராக்கியாக இருந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தேங்காய் அதிகம் உற்பத்தியாகி மார்க்கெட்டுக்கு வர துவங்கியுள்ளதால் கூடுதலாக விலை போகவில்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு தேங்காய் ரூ.15க்கு விற்று வந்த நிலையில், தற்போது ரூ.9க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர். தற்போது விற்கப்படும் தேங்காய் விலை வெட்டுக்கூலிக்கும், உறிப்பதற்கும் அதை சந்தைப்படுத்துவதற்குகூட கட்டுப்படி ஆகவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே தென்னை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: