ரயிலில் ஆவணமின்றி ஆயத்த ஆடைகள் அனுப்பிவைப்பு ஈரோடு முதன்மை பார்சல் கண்காணிப்பாளருக்கு ரூ.6.50 லட்சம் அபராதம்

சென்னை: ரயிலில் ஆவணமின்றி ஆயத்த ஆடைகள் அனுப்பிவைத்த விவகாரத்தில் ஈரோடு சந்திப்பு முதன்மை பார்சல் கண்காணிப்பாளருக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து வணிகவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சாலிமர் ரயில்  நிலையத்திலிருந்து கோவிட் -19 சிறப்பு சரக்கு ரயில் மூலமாக ஈரோடு ரயில் நிலையத்திற்கு 250 சிப்பம் ஆயத்த ஆடைகள், எவ்வித ஆவணங்களும் இன்றி அனுப்பப்பட்டுள்ளதாக ஈரோடு வணிகவரித்துறை கண்காணிப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஈரோடு வணிகவரி நுண்ணணறிவுக் கோட்ட இணை ஆணையர் மற்றும் அதிகாரிகள் கடந்த 21ம் தேதி ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த சரக்குப் பெட்டகத்தை ஆய்வு செய்தனர்.  

ஆய்வில் சம்பந்தப்பட்ட சரக்குகள், உரிய ரசீது மற்றும் மின்னணுப் பட்டியல் ஏதுமின்றிக் கொண்டுவரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆவணங்களின்றிக் கொண்டுவரப்பட்ட சரக்குகள் மீது வரி மற்றும் அபராதமாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டுச் சரக்குகள் விடுவிக்கப்பட்டன. மேலும், இது தொடர்பாக எவ்வித ஆவணங்களின்றி ரயில் மூலம் சரக்குப் போக்குவரத்து செய்தமைக்காகத்  தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்திற்குட்பட்ட, ஈரோடு சந்திப்பு முதன்மை பார்சல் கண்காணிப்பாளருக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தும், சரக்கு அனுப்பியவர் மற்றும் பெறுபவர்களுக்கு ஆவணங்களின்றி  சரக்குப்  போக்குவரத்து மேற்கொள்ள துணை போனதற்காக ரூ.50 ஆயிரம் தண்டணை விதித்தும் அறிவிப்பு வழங்கப்பட்டது.

Related Stories: