மயிலாடும்பாறையில் 2500 ஆண்டு பழமையான குடுவை கத்தி துண்டுகள் கண்டுபிடிப்பு-அகழாய்வின் போது கிடைத்தன

கிருஷ்ணகிரி :  மயிலாடும்பாறையில் அகழாய்வின் போது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கத்தி துண்டுகள், குடுவைகள், குவளைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை மற்றும் கீழடி, கொந்தகை, அகரம், கங்கைகொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மணலூர் என 10 இடங்களில் தற்போது அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொகரப்பள்ளி அருகே உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் அகழாய்வு துவங்கப்பட்டது.

தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த அகழாய்வில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கல்திட்டையில், 70 செ.மீ., நீளம் உள்ள இரும்பு வாளும், நான்கு பானைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 3 கால்கள் உள்ள 4 சிறிய குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும்பாறை சானாரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மலையின் கீழ், 300க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கற்திட்டைகளும், கற்பதுக்கைளும் காணப்படுகின்றன. கடந்த 1980 மற்றும், 2003ல் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளில் இவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 3 மாதம் ஆய்வு மேற்கொண்டதில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், நான்கு மண் பானைகளும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அதே பகுதியில் இறந்தவர்களை புதைக்கும் குழியின் நான்கு மூலைகளிலும் 3 கத்தி துண்டுகளும், மூன்று கால்கள் உள்ள 4 சிறிய குடுவைகளும், ஒரு தண்ணீர் குவளையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: