இந்தியாவில் 67 சதவீத மக்களுக்கு எதிர்ப்பு சக்தி வந்து விட்டது: 40 கோடி பேரை கொரோனா தாக்கும்: ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் மூன்றில் 2 பங்கு மக்களுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாகி உள்ளது. அதே நேரம், 40 கோடி பேர் கொரோனாவால் தாக்கப்படும் அபாய நிலையில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டி உள்ளது. பலி எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.   இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்ஆர்) சார்பில் 4வது தேசிய கொரோனா எதிர்ப்பு சக்தி ஆய்வு (செரோ) ஜூன் - ஜூலை மாதத்தில் எடுக்கப்பட்டது.

இது குறித்து, ஐசிஎம்ஆரின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில் 28,975 பொதுமக்கள், 7,252 சுகாதார பணியாளர்களிடம் நடத்தப்பட்ட செரோ ஆய்வில், 6 வயதுக்கும் மேல் மூன்றில் இரண்டு பங்கு (67.6%) மக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லை. இதனால், 40 கோடி பேரை கொரோனா தாக்கும் அபாயம் உள்ளது. 85% சுகாதார பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது. 10ல் ஒரு சுகாதார பணியாளர் இன்னும் தடுப்பூசி போடவில்லை. சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். முழுமையாக தடுப்பூசி போட்டால் மட்டுமே பயணம் செய்யுங்கள்,’’ என்றார்.

கொரோனா அரசியல் அல்ல

பாஜ. எம்.பிக்கள் கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, ‘‘கொரோனா நெருக்கடி அரசியல் பிரச்னை அல்ல; மனிதாபிமான பிரச்னை. காங்கிரஸ் கோமாவில் உள்ளது. பாஜ அதிகாரத்திற்கு வருவதை அக்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்,’’ என்றார்.

அமெரிக்காவின் கட்டுப்பாடு தளர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அந்நாட்டுக்கு பயணம் செய்வதை எளிதாக்க வேண்டும் என மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, ‘பயணதுக்கு அனுமதி கிடையாது’ என்ற பட்டியலில் இருந்த இந்தியாவை, ‘நிபந்தனைகளுடன் பயண அனுமதி’ என்ற கட்டத்துக்கு அமெரிக்க அரசு மாற்றியுள்ளது.

125 நாட்களுக்கு பின் பாதிப்பு 30,000

* இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,093 பேர் தொற்றால்  பாதித்துள்ளனர். இது, கடந்த 125 நாட்களுக்கு பின் பதிவான குறைந்த  எண்ணிக்கையாகும். நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74  ஆயிரத்து 322 ஆக உள்ளது.

*  ஒரே நாளில் புதிதாக 374 பேர் பலியாகி உள்ளனர். இது, கடந்த 111 நாட்களுக்கு பின்  பதிவான குறைந்த பலி எண்ணிக்கை. மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து  482 ஆக உயர்ந்துள்ளது.

2.11 கோடி டோஸ் கையிருப்பு

நாடு முழுவதும் 42 கோடியே 15 லட்சத்து 43 ஆயிரத்து 730 டோஸ் தடுப்பூசி விநியோகம் செய்யப்பட்டதில், 40 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரத்து 489 டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2 கோடியே 11 லட்சத்து 93 ஆயிரத்து 241 டோஸ் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: