தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு அறிக்கை: முதல்வரிடம் நீதிபதி முருகேசன் வழங்கினார்

சென்னை: தொழில் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் தலைமையிலான ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று அளித்தது. தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில்  ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்து கடந்த மாதம் 15ம் தேதி உத்தரவிட்டது. கடந்த 2020-2021ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதேபோல பொறியியல், வேளாண், கால்நடை, மீன் வளம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் சேர்க்கையின்போது, பல்கலைக் கழகங்கள், அரசுக் கல்லூரிகள், முன்னிலை வகிக்கும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் மேற்கண்டபடி குறைந்த அளவில் சேர்க்கப்படுவதை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தக்க பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் வகையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், ஒரு மாத காலத்தில் தனது பரிந்துரையை அளிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அந்த ஆணையத்தின் முதல் கூட்டம் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. அதில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பில் சேர்க்கப்பட்ட விவரங்கள் பெறப்பட்டன. இதற்கு பிறகு இம்மாதம் 5ம் தேதி இரண்டாவது கூட்டம் நடந்தது. அப்போது மேற்கண்ட மாணவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகள் அனைத்தும் தொழில் கல்வி இயக்ககம் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியான அறிக்கை 13ம் தேதி தயார் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை  முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், நீதிபதி முருகேசன் மற்றும் அந்த ஆணையத்தின் பிரதிநிதிகள் நேற்று நேரில் அளித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில், மருத்துவக் கல்வி சேர்க்கையில் வழங்கியது போல இதர தொழில் கல்வி படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பேரில்  இந்த ஆண்டு நடக்கும் தொழில்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

Related Stories: