பணம் செலுத்தப்பட்ட விவரம் பற்றி ஓய்வூதியதாரர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல்: வங்கிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் பற்றிய தகவல்களை வாட்ஸ் அப், இ-மெயில் மூலமாகவும் அனுப்பும்படி வங்கிகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசு, தனியார், பொதுத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு மாதந்தோறும் வங்கிகள் மூலமாக ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தகவலை எஸ்எம்எஸ் மூலமாக வங்கிகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஓய்வூதிய நடைமுறை மையங்களுடன் ஒன்றிய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை அமைச்சகம் கடந்த மாதம் ஆலோசனை நடத்தியது.

இதில், ஓய்வூதியம் பெறுவோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டதும் அது குறித்து அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும் தகவல் அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிகளுக்கு ஒன்றிய ஒய்வூதியம் மற்றம் ஓய்வூதியதாரர் நலத்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘ஓய்வூதியதாரர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதும் அது தொடர்பாக தகவல்களை எஸ்எம்எஸ் மட்டுமின்றி, வாட்ஸ் ஆப், இ-மெயில் மூலமாகவும் அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஓய்வூதியதார்களுக்கு அனுப்பப்படும் தகவலில் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள  தொகை, வரி விலக்கு உள்பட இதர முழு விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: