ஆன்மிக தலங்களை இணைக்கும் ரயில் சேவை: தென்மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் தகவல்

காஞ்சிபுரம்: காசி, அயோத்தி, காஞ்சிபுரம் உள்பட ஆன்மிக ஸ்தலங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க பரிந்துரைக்கப்படும் என ரயில்வே வாரிய தென் மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் தெரிவித்தார். ரயில்வே வாரிய தென்மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. அரக்கோணம், காஞ்சிபுரம் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தோம். ரயில் பயணிகளிடமும், ரயில்வே ஊழியர்களிடமும் குறைகளை கேட்டு அறிந்து கொண்டோம். காஞ்சிபுரத்தில் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றோம்.

அப்போது அவர் காசி, அயோத்தி, காஞ்சிபுரம் உள்பட ஆன்மிக ஸ்தலங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று, தெற்கு ரயில்வேக்கு, பரிந்துரைத்து ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் சிலர் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும்படியும், காஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கு சுற்றுப்பாதை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலப் பணி விரைந்து முடித்து திறப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன் பாஜ காஞ்சிபுரம் மாவட்ட கல்வியாளர் அணி துணைத் தலைவர் சுபாஷ் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: