புதுடெல்லி: தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் முடிவடைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி சென்றார். அவர், நேற்று காலை 10.30 மணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், பிற்பகல் 12மணிக்கு ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து 30 நிமிடங்களுக்கும் மேல் ஆலோசனை மேற்கொண்டார். மாலை 4 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், ஆளுநர் மாற்றம் பற்றி குறிப்பாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்வாரிலால் இன்று காலை சென்னை திரும்புகிறார்.