தமிழகத்தில் ெசப். 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

காரைக்குடி:  ‘‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் செப். 15ம் தேதிக்குள் நடத்தப்படும்’’ என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி பிளான்ட் நிறுவும் பணி நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு பிறகு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தரவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாறும். தமிழகத்தில் நூறுநாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படுவதுடன் ஊதியம் 300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் காலத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதுவரை கொரோனா காலத்தில் 16 லட்சம் பேர் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை  வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருந்தது.

இதில் ஊரக வளர்ச்சித்துறையும் விதிவிலக்கு அல்ல. இத்துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப். 15ம் தேதிக்குள் நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, உரிய காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: