ஆதிதிராவிடர், பழங்குடியினர் கலை இலக்கிய பணிக்காக படைப்பாளிகள் 21 பேருக்கு தலா 20 ஆயிரம் பரிசுத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறித்துவர்களின் சிறந்த 10 படைப்புகள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாதோர் ஒருவரின் சிறந்த படைப்பையும் சேர்த்து மொத்தம் 11 படைப்புகளைத் தேர்வு செய்து, அப்படைப்புகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018-2019ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்ட கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழி நடையும் நூலுக்காக எழுதிய முனைவர் அறிவரசன், திருக்குறளில் பவுத்தம் நூலுக்காக வசந்தா, மாமன்னர் அசோகர் நூலுக்காக பிரேம்குமார், தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன் நூலுக்காக முனைவர் அன்னையப்பன், வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி நூலுக்காக சுகிர்தராஜா, பவுத்த தியானம் நூலுக்காக கலாராணி, பேரறிஞர் அம்பேத்கர் நூலுக்காக மோனிகா, சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள் நூலுக்காக ரமேஷ், தடை அதை உடை புதிய சரித்திரம் படை - உளவியல் கட்டுரை நூலுக்காக பரமேஸ்வரி, இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை நூலுக்காக அன்பாதவன், தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள் நூலுக்காக இளங்கோவன் ஆகியோருக்கும், 2019-2020 ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டதடையும் ஒரு நாள் உடையும் நூலுக்காக கருப்பையன், குப்பத்து ராஜாக்கள் நூலுக்காக சண்முகசுந்தரம், உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் நூலுக்காக மோகன், வெற்றி முழக்கங்கள் நூலுக்காக பாரதிராஜா, தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் நூலுக்காக காளிமுத்து, எத்திசை செலினும் நூலுக்காக அன்டனூர் சுரா, படைப்பு வெளியில் பதியும் பார்வைகள் நூலுக்காக மீனாசுந்தர், நலம் தரும் நாட்டு வைத்தியம் நூலுக்காக கமலம் சின்னசாமி,

உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைகள்-ஓர் பன்முகப் பார்வை - கட்டுரைத் தொகுப்பு நூலுக்காக முனைவர் ராஜா, இசை மொழியும், ஆதி இனமும் நூலுக்காக ஆடலரசு ஆகிய 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் முதல் தவணைத் தொகையாக தலா ₹20 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Related Stories: