தமிழகத்தில் முதல் முறையாக குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை

குன்னூர் : தமிழகத்தில் முதல்முறையாக குன்னூரில் 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்களை தன்னார்வலர் ஒருவர் இலவசமாக வழங்கி உள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. தன்னார்வலர். இவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னார்வலர்களுடன் இணைந்து குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் உற்பத்தி கொள்கலன்களை வழங்கினார்.

தற்போது, குன்னூர், கேத்தி, கோத்தகிரி பகுதிகளுக்கு 6 ஆட்டோ ஆம்புலன்ஸ் வாகனங்களை இலவசமாக வழங்கி உள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் துவங்க உள்ளது. ஆம்புலன்ஸ் சிறியதாக உள்ளதால் குறுகிய பாதைகளில் எளிதில் நோயாளிகளை கொண்டு செல்ல முடியும். இதில், ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் உள்ளது. இந்த வாகனத்தில் ஓட்டுநர் அமர தனி கேபின் வசதி உள்ளதால் கொரோனா நோயாளிகளை கூட எளிதில் அழைத்து செல்லலாம்.

இது குறித்து ராதிகா கூறுகையில், ‘‘ஆட்டோ ஆம்புலன்ஸ் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து தயாரித்து கொண்டு வரப்பட்டது. ஒரு ஆட்டோ ஆம்புலன்ஸ் ரூ.3.50 லட்சம். மொத்தம் ரூ.21 லட்சம் செலவில் 6 வாகனங்கள் குன்னூர், கேத்தி, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: