ஒட்டன்சத்திரம்: தூர்வாரும் பணியை தொடங்குவதற்காக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். ஒட்டன்சத்திரம் வன பகுதிக்குச் சொந்தமான வடகாடு மலை பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடியாகும். பரப்பலாறு அணையின் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.