விழுப்புரம்: கொரோனாவுக்கு கணவர் மற்றும் குடும்பமே பலியான நிலையில், ஆதரவற்ற தனக்கு அரசு நிவாரண நிதியையும், வேலை வாய்ப்பினையும் உடனடியாக வழங்க கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கைக்குழந்தையுடன் வந்த சென்னை பெண் மனு அளித்தார். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த விஜயபாலாஜி மனைவி ஜெயபாரதி என்பவர் நேற்று தனது இரண்டு பிள்ளைகளுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது கணவர் விஜயபாலாஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக விழுப்புரம் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், சில நாட்களில் இறந்து விட்டார். மேலும் எனது மாமனார், மாமியாரும் கொரோனா தொற்றினால் அதே மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழந்து விட்டனர்.