ராமநாதபுரம்: மர்மப்படகு மூலம் கனடா செல்ல தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களில் 4 பேரை மங்களூர் தனிப்படை போலீசார் வேதாளை அழைத்து வந்து விசாரித்தனர். இலங்கை, புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கை தமிழர் 34 பேர் மர்மப்படகில் கனடா செல்ல திட்டமிட்டனர். மே 27ம்தேதி புத்தளம் கடற்கரையில் புறப்பட்டு 28ம் தேதி அதிகாலை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரை வந்தனர். இங்கிருந்து மங்களூரு சென்று கடல் வழியாக கனடா தப்பிச்செல்ல முயன்ற 34 பேரையும், ஜூன் 11ல் மங்களூரு போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேரை மட்டும் போலீஸ் காவலில் எடுத்த மங்களூரு போலீசார், அவர்களை மண்டபம் அருகே வேதாளை கடற்கரைக்கு நேற்று அழைத்து வந்தனர்.