குமரியில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர், கூட்டுறவு சங்க செயலாளரான பெண்ணுக்கு கொலை மிரட்டல்!: வீடியோ காட்சிகள் வெளியீடு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் கூட்டுறவு சங்க செயலாளரான பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் உள்ளார். இவர் அதிமுகவின் வால்வச்சகோஷ்டம் பேரூர் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார். 

இவர் அந்த கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக 34 ஆண்டுகளாக பணிபுரியும் கேசியா என்ற பெண்ணை பணி செய்விடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மோகன்தாஸ் பதவியேற்றது முதலே கேசியாவை சங்க விதிகளுக்கு புறம்பாக செயல்பட வற்புறுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிபோதையில் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு வந்த மோகன்தாஸ், செயலாளர் கேசியாவை தரக்குறைவாக பேசியிருப்பதோடு, என்னிடம் மோதினால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். 

அங்குள்ள பணியாளர்கள் தடுத்தும் கேசியாவை தாக்க அவர் முயற்சித்திருக்கிறார். இவை அனைத்தும் பணியாளர்களால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளரான கேசியாவிடம் கேட்ட போது கடந்த 8 ஆண்டுகளாக மோகன்தாஸால் தான் மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வருவதாக கூறினார்.

 மேலும் இதுகுறித்து தான் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மோகன்தாஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். இதனிடையே கூட்டுறவு சங்க செயலாளரான பெண் ஊழியரை சங்க தலைவரே தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: