திருச்சுழி அருகே வறட்சியால் ஊரே காலி கணவன்-மனைவி மட்டுமே வசிக்கும் விசித்திர கிராமம்

திருச்சுழி: திருச்சுழி அருகே வறட்சியால் கிராமத்தை காலி செய்து விட்டு மக்கள் வெளியேறினாலும் தம்பதி மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குச்சம்பட்டி கிராமத்தில் கடந்த 60  ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. அப்போது குண்டாறில் சுமார் 6 மாதங்களுக்கு இடைவிடாது மழைநீர் செல்வது வழக்கம். இதனால் இப்பகுதியில் விவசாயம் செழித்து, கிராம மக்கள் வசதி படைத்தவர்களாக வாழ்ந்துள்ளனர். ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல மழை பொய்யாமல் குண்டாறில் நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் குச்சம்பட்டி கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

வாழ வழியற்ற நிலையில் பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு சென்னை, மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்கு கிராம மக்கள் வீடுகளை பூட்டி விட்டு சென்று விட்டனர். இதனால் கிராமமே காலியானது. ஆனால், இந்த கிராமத்தில் சுபாஸ்சந்திரபோஸ் (76) என்ற வைத்தியர், மனைவி சீத்தாலட்சுமியுடன் (64) வசித்து வருகிறார். ஊரை காலி செய்து விட்டுச் சென்ற மக்கள், வருடத்திற்கு ஒரு முறை குச்சம்பட்டியில் உள்ள மந்தை மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட வருகின்றனர். வைத்தியர் சுபாஸ் சந்திரபோஸ் சொரி, சிரங்கு போன்றவற்றிற்கு வைத்தியம் செய்து வருகிறார். இவரை தேடி நோயாளிகள் மட்டும் அவ்வப்போது குச்சம்பட்டி வந்து செல்கின்றனர்.

Related Stories: