விழுப்புரத்தில் சுற்றிவளைத்தபோது பரபரப்பு வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கி முனையில் கைது: போலீசிடம் இருந்து தப்பியபோது கை, கால் உடைந்தது; மருத்துவமனையில் அனுமதி

சென்னை: போலீசாருக்கு பயந்து விழுப்புரத்தில் பதுங்கி இருந்த வடசென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி கைது செய்தனர். அப்போது அவன் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது தடுக்கி விழுந்ததில் கால், ககைள் உடைந்து பலத்த காயத்துடன் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவி ஏற்கும்போது, சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை குறைப்பேன் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் தென் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி மணியை கைது செய்யப்பட்டான். அதேப்போல், வடச்சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு அவனது ரகசிய நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது. காரணம், கடந்த 2017ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் ஜாமீனில் வெளிவந்தவனை, வேறு ஒரு வழக்கில் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்த பாலாஜி சென்னையில் இருந்து தலைமறைவாகிவிட்டான். இதனால் அவனை கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் 4 தனிப்படையினர் ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு தலைமையில் ஒரு தனிப்படையினர் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது அவன் விழுப்புரத்தில் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் சென்ற தனிப்படை போலீசார். துப்பாக்கி முனையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பாலாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவனை போலீசார் சென்னைக்கு அழைத்து வரும்போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடினான். அப்போது, தவறி கீழே விழுந்ததில் ரவுடி பாலாஜியின் வலது கை, கால்கள் முறிந்தது. இதனால் தப்பியோட முடியாத அவனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர், ஸ்டான்லி மருத்துவமனையில் கை, கால்களுக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* யார் இந்த ‘காக்கா’?

சென்னை பிராட்வே பகுதி பி.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவன் காக்கா தோப்பு பாலாஜி (38). சிறு வயதில் இருந்தே கொலை, வழிப்பறி, கட்ட பஞ்சாயத்து ஆகியவற்றில் ஈடுப்பட்டு வந்தான். அப்படியே, படிபடியாக வளர்ந்து வடசென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தான். இவன் மீது 7 கொலை வழக்குகள், 20 கொலை முயற்சி வழக்குகள் என 52 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவன் 10 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.

Related Stories: