சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பூர்: பெரம்பூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வடசென்னை மாவட்ட பத்திர பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மதியம் 2 மணியளவில் ரசாயன வெடிகுண்டு வெடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வடசென்னை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் இயங்கும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்குமாறு
அறிவுறுத்தபட்டது.

அதன்பேரில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு பதிவாளர் ஏழுமலை, வெடிகுண்டு மிரட்டல் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் விரைந்து வந்து சார் பதிவாளர் அலுவலகம் முழுவதும் நவீன கருவிகளின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையின் முடியில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து செம்பியம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: