புகையிலை பொருட்கள் பதுக்கிய 18 வணிக நிறுவனங்களுக்கு சீல்

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடுக்கும் பொருட்டு, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சிறப்பு சோதனையில் 360 காவல்துறையினர் மற்றும் 16 உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளடக்கிய 40 குழுக்கள் அமைக்கப்பட்டு தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட 121 பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு சோதனையின்போது மொத்தம் 254 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்ததில் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சிஓடிபி ஏ சட்டத்தின் கீழ் மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில், 2 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.இச்சிறப்பு சோதனையின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 90 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரால், மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளின் விளைவாக, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேமிப்பு தொடர்பான சட்ட ரீதியான விதிமுறைகளை மீறிய 18 வணிக நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

9,400 போதை மாத்திரை 100 ஊசிகள் பறிமுதல்
அயனாவரத்தில் போதை மாத்திரை விற்ற, மாதவரம் குமரன் பிரதான சாலையை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (38), திருவிக நகரைச் சேர்ந்த அருள் ஜஸ்டின்(30), பெரம்பூர் நட்டால கார்டன் 2வது தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார்(19) ஆகியோரை போலீசார் கைது செய்து, 94 பெட்டிகளில் 9,400 போதை மாத்திரைகள், 100 ஊசிகளை பறிமுதல் செய்தன்ர. விசாரணையில், சுல்தான் அலாவுதீன் என்பவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ் என்பவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி வந்து நண்பர்களான அருள் ஜஸ்டின். சந்தோஷ் குமார் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது.

Related Stories: