தாய்வழி பாட்டியுடன் வெயிலில் நடந்து சென்றபோது தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் சிறுமி பலி: குழந்தைகள் ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ்

ஜலூர்: ராஜஸ்தானில் பாட்டியுடன் நடந்து சென்ற 5 வயது சிறுமி தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் பலியான சம்பவம் குறித்து, தேசிய குழந்தைகள் ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் ராணிவாராவில், அஞ்சலி என்ற 5  வயது சிறுமி, தனது 60 வயதான தாய்வழி பாட்டியான சுகி தேவி வளர்த்து வந்தார். சிறுமியின் தந்தை இறந்த நிலையில், தாய் சிறுமியை அப்படியே விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அதனால், பாட்டிதான் சிறுமியை வளர்த்து வந்தார்.

இந்நிலையில், ராய்ப்பூரில் இருந்து ஜலூர் நோக்கி சிறுமியும், பாட்டியும் கடும்  வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிறுமிக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. ஆனால், அவருக்கு அந்த இடத்தில் யாரும் தண்ணீர் கொடுக்கவில்லை. திடீரென மயக்கமடைந்த சிறுமி, சம்பவ இடத்தில் கீழே விழுந்தார். அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் சிறுமியை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறுமி இறந்துவிட்டாதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம், ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (ஆர்.எஸ்.சி.பி.சி.ஆர்), மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கோரியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘குடிநீர் கிடைக்காமல் சிறுமி இறந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மாநில அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்’ என்று கோரியுள்ளது. இதுகுறித்து, என்.சி.டபிள்யூ தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ‘வயதான பெண்மணி மற்றும் சிறுபான்மையினரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும். தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தில், மக்களுக்கு குடிக்க தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை மிகுந்த கவலை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories: