இளம்பெண், 2 இந்தியர் என கடத்தியவர்கள் பெயரை வெளியிட்ட சோக்சி: ஆன்டிகுவா போலீஸ் விசாரணை

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி, இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றார். கடந்த மாதம் 23ம் தேதி அவர் ஆன்டிகுவாவில் இருந்து மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், டொமினிகாவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக மெகுல் சோக்சியை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவர் தப்பி செல்வதற்கான வாய்ப்பு இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கவும் அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில் ஆன்டிகுவாவில் இருந்து தன்னை கடத்தியவர்களின் பெயர்களை மெகுல்சோக்சி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மெகுல்சோக்சி கடத்தப்பட்டது தொடர்பாக அவரது வழக்கறிஞர்கள் ஆன்டிகுவார் ராயல் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் தன்னை கடத்தியவர்களின் பெயர்களை மெகுல்சோக்சி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இளம்பெண் ஒருவரின் பெயரையும், 2 இந்தியர்களின் பெயரையும் சோக்சி கூறி உள்ளார். இது தொடர்பாக ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறுகையில், “மெகுல் சோக்சி கடத்தப்பட்டது உண்மையாக இருந்தால் இது தீவிரமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விவகாரமாகும். மெகுல்சோக்சி கடத்தல் தொடர்பாக தற்போது விசாரணை தொடங்கி நடந்து வருகின்றது” என்றார்.

Related Stories: