காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்வு-பெரியகுளம் பொதுமக்கள் புகார்

பெரியகுளம் : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு இன்று முதல் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ேநற்று மட்டும் அத்தியாவசிய தேவை பொருட்களான காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ்நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், பெரும்பாலானோர்முகக்கவசம் அணியாமல் கூட்டம், கூட்டமாக காய்கறிகளை வாங்கினர். இதேபோல மளிகைக் கடை மீன் மற்றும் கறி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் குவிந்து பொருட்களை வாங்கினர். காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியும் பொதுமக்கள் நோய்த்தொற்றின் தீவிரத்தை அலட்சியப்படுத்தி பொருட்களை வாங்க குவிந்தனர்.

மேலும் ஒரு நாள் மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறிகளின் விலை நேற்றைய விலையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்து விற்கப்பட்டது. இதனால் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இன்று முதல் முழு ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வீடுகள் தோறும் தெருத்தெருவாக விற்பனை செய்யவுள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்ததால் ஒரே நாளில் வியாபாரிகள் விலையை இரட்டிப்பாக்கி விட்டனர் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Related Stories: