திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடை திறக்கப்பட்டு ஒருநாள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இன்று இந்த ஆண்டின் பிரதிஷ்டை தினமாகும். இதையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போத்தி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள், தொடர்ந்து 25 கலசாபிஷேகம் நடந்தன.