ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட வேண்டும்: குடியரசு தலைவருக்கு முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் விடுதலைக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக  சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அமைச்சரவை 2018 செப்டம்பர் மாதம்  தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இதன் மீது  முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது எனக் கூறிய ஆளுநர், அமைச்சரவை  தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். நாட்டின் உச்ச நீதிமன்றம் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, சிறைவாசிகள் எண்ணிக்கையை  குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19ம் தேதி எழுதியுள்ள கடிதத்தின் வேண்டுகோளை ஏற்று, எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என குடியரசு தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: