திருச்சி: திருச்சி, திருவெறும்பூரில் ம.நீ.ம. கட்சி நிர்வாகிகள் கூண்டோடு விலகினர். கமல் சர்வாதிகாரி போல செயல்படுகிறார், தேர்தல் தோல்விக்கு அவர் மட்டுமே காரணம் என்று கூறி கட்சியில் இருந்து மாநில பொது செயலாளர் முருகானந்தம் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் குமரேசபுரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். மக்கள் நீதி மய்யம் கட்சியின் கட்டமைப்பு மற்றும் சார்பு அணிகளின் மாநில பொதுச்செயலாளராக இருந்த இவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். இந்நிலையில் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு முருகானந்தம் அனுப்பினார். இவருடன் சேர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வீரசக்தி, கிளை செயலாளர்கள் 200 பேர், 2,200 கிளை செயற்குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகுவதாக தெரிவித்தனர்.