ரேஷன் கடைகளில் வரும் 15ம் தேதி முதல் ₹2 ஆயிரம் வழங்கப்படும்-கலெக்டர் அறிவிப்பு

நாமக்கல் :  தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண உதவித்தொகை  ₹2 ஆயிரம், நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல்  ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள 5 லட்சத்து 25 ஆயிரத்து 17 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல்  கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ₹2 ஆயிரம்  வழங்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தினமும் 200 டோக்கன்களில் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

 டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் மட்டும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கடைகள் காலை  8 மணி முதல் 12 மணி வரை மட்டும் செயல்படும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும், நிவாரண உதவித் தொகை முதல் தவணை வழங்கப்படும்.  

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.  சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.  நிவாரண உதவித்தொகை பெறுவதில் எதாவது குறைபாடுகள் இருந்தால், மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையை 04286-281116  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: