கொரோனாவால் ெதாழில் நசிந்தது கடனை திருப்பி கொடுக்க முடியாமல் 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை: உசிலம்பட்டியில் பரிதாபம்

உசிலம்பட்டி: கொரோனாவால் தொழில் நசிந்து, வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் 3 குழந்தைகளுடன், தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உசிலம்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   மதுரை மாவட்டம், உசிலம்பட்டி,  ஆர்.கே.தெருவை சேர்ந்தவர் சரவணன் (37). இவர் உசிலம்பட்டி நகைக்கடைத் தெருவில் நகை பழுது பார்க்கும் பட்டறை வைத்திருந்தார். மனைவி நிதி பூங்கோதை (30). மகள்கள் மகாலட்சுமி(10), அபிராமி(7), மகன் அமுதன்(5). இவரது தொழில்  கடந்த கொரோனா ஊரடங்கின்போதே நலிவடைந்தது. இதனால் மிகவும் கஷ்டத்துக்கு ஆளானார். குழந்தைகளை காப்பாற்ற கடன் வாங்கினார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டனர். குடும்ப செலவிற்கே பணம் இல்லாததால்,  கடனை அடைக்க முடியாமல் சரவணன் மனமுடைந்தார். இந்நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் சரவணன் வீடு திறக்கப்படவில்லை.

அக்கம்பக்கத்தினர் புகாரின்படி உசிலம்பட்டி நகர் போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, தம்பதி உட்பட 5 பேரும் இறந்து கிடந்தனர். விசாரணையில்,  நேற்று அதிகாலை மனைவி நிதி பூங்கோதையை பால் வாங்கி வரச்சொல்லி,  அதில் நகைகளுக்கு பாலீஸ் செய்யும் ஆசிட்டை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்கள் இறந்ததும், தம்பதியும் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. வீட்டில் சரவணன் தனது தாயாருக்கு எழுதியிருந்த கடிதத்தை போலீசார்  கைப்பற்றினர். அதில், ‘‘வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. கொரோனாவால் வேலையும் இல்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை மன்னித்து  விடுங்கள் அம்மா’’ என்று எழுதப்பட்டுள்ளது. கொரோனாவால் வாழ்வதாரம் இழந்து குடும்பமே தற்கொலை செய்தது உசிலம்பட்டி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: