கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாட்டால் திண்டுக்கல் நகர் வெறிச்சோடியது

* 12 மணியுடன் கடைகள் அடைப்பு

* சாலைகளில் குறைந்த தலைகள்

திண்டுக்கல் : கொரோனா தடுப்பு புதிய கட்டுப்பாட்டால் திண்டுக்கல் நகர் பகுதியில் 12 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகளும் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியது. தமிழகத்தில் கொரோனாவின் 2ம் கட்ட தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை குளிர்சாதன வசதி இல்லாத தனியாக செயல்படக்கூடிய காய்கறி, பலசரக்கு, டீ, இறைச்சி, மீன் கடைகள் செயல்படலாம் என்றும், மருந்து, பால் விநியோகம், உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ்களை 50 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று திண்டுக்கல் நகரில் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அனைத்து கடைகளும் பகல் 12 மணியுடன் அடைக்கப்பட்டன. உள்ளூர், வெளியூர் செல்லும் அரசு- தனியார் பஸ்கள் 50 சதவீத பயணிகளை கொண்டு இயக்கப்பட்டன.

இதனால் பல தனியார் பஸ்கள் ரத்து செய்தன. திண்டுக்கல் கிராம பகுதியில் இருந்து நகருக்கு பொதுமக்கள் வருவது குறைவாக இருந்தது. இதனை கண்காணிக்க ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் வேலை பார்த்தனர். பகல் 12 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் திண்டுக்கல் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் பழநி, நத்தம், வேடசந்தூர், ஆத்தூர், வத்தலக்குண்டு என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின.

Related Stories: