வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தால் அச்சம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை ஒட்டி வரட்டுப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் அந்தியூர் பகுதி மீனவர்கள் மீன்களை விட்டு வளர்த்து, அதனை பிடித்து உயிருடன் கொடுப்பதால் அணை பகுதிக்கே பொதுமக்கள் அதிகளவில் சென்று வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வரட்டுப்பள்ளம் அணை கரை பகுதிகளில் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. வழக்கமாக, யானைகள் வனப்பகுதிக்குள் அணையின் உட்புறமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு சென்று விடும். ஆனால், இந்த யானை தொடர்ந்து அணையின் முன்பகுதி மற்றும் அணையின் கரைப்பகுதிகளில் சுற்றித்திரிகிறது. இதனால், அணைப்பகுதிக்கு வரும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: