வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று காலை சிறுத்தை தப்பியது? பூங்கா நிர்வாகம் பதில் கூற மறுப்பு வாட்ஸப்பில் பரவும் தகவலால் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று காலை சிறுத்தை தப்பியதாகவும், இதுகுறித்து கேட்டதற்கு, பூங்கா நிர்வாகம் பதில் கூற மறுத்துவிட்டது. மேலும் வாட்ஸப்பில் பரவும் தகவலால்  வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட அரிய வகை விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனைக் காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூங்காவில் உள்ள ஒரு சிறுத்தை தப்பிவிட்டதாகவும், இதனான்ல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேடாம் என்று வாட்ஸப்பில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து பூங்கா நிர்வாகிகளும் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர். மேலும் வண்டலூர் பூங்காவை சுற்றி நெடுங்குன்றம், ஊனமாஞ்சேரி, காரணைப்புதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், நல்லம்பாக்கம், குமிழி பெருமட்டுநல்லூர் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக வன காப்பு காடுகள் உள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை உலாவுவதாக தகவல் பரவியது. அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தும், சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் வனத்துறையினர் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் பூங்காவிலிருந்து சிறுத்தை இன்று காலை தப்பிய தகவல் பல்வேறு கிராம மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதனால் பொதுமக்களிடையே பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Stories: