தனியார் கட்டுமான பகுதியில் 300 கிலோ இரும்பு திருடியவர் கைது

அண்ணாநகர்: முகப்பேரில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களை ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் அறை கதவின் பூட்டை உடைத்து ₹70 ஆயிரம் மதிப்புள்ள 300 கிலோ இரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து காவலாளி ரமேஷ் கொடுத்த புகாரின்படி, நொளம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் 4 பேர், இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. அதை வைத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நொளம்பூர் சர்வீஸ் சாலையில், இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முகப்பேர் பகுதியை சேர்ந்த இளஞ்செழியன் (எ) அப்பு (24) என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 300 கிலோ இரும்பு, அலுமினியம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் 3 பேரை தேடி வருகின்றனர்.

The post தனியார் கட்டுமான பகுதியில் 300 கிலோ இரும்பு திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: