வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 1,100 அதிகாரிகள்: தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவலுக்கிடையில் பாதுகாப்பாக தேர்தல் நடத்தி முடித்ததற்காக அனைவருக்கும் வாழ்த்து கூறினார். அத்துடன் இன்றைய வாக்கு எண்ணிக்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகளையும் வழங்கியுள்ளார். அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்துக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். இதற்காக தேவையான விரிவான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

கடந்த 28.04.21 அன்றே தேர்தல் ஆணையம் இதுகுறித்த வழிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதால் மேலும் கூடுதல் விதிமுறைகளை தற்போது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆர்டி-பிசிஆர் மற்றும் ஆர்ஏடி பரிசோதனை செய்யாத அல்லது 2 டோஸ்கள் தடுப்பூசி போட்டிராத வேட்பாளர்கள், பிரதிநிதிகளை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. கடந்த 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் என பெற்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். செய்திகள் சேகரிக்க வரும் ஊடகவியலாளர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

ஐந்து மாநிலங்களில் இதற்காக சுமார் 1,50,000 வாக்கு எண்ணும் பிரதிநிதிகளுக்கும், 12 ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2,364 மையங்களில் நடைபெறுகிறது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 1002 மையங்களில் மட்டுமே நடைபெற்றது. கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 2 மடங்காக வாக்கு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநில வாக்கு எண்ணிக்கைக்காக 822 பிராந்திய அதிகாரிகளும், 7 ஆயிரம் துணை பிராந்திய அதிகாரிகளும் 95 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 1,100 கண்காணிப்பாளர்களும் அமர்த்தப்பட்டு உள்ளனர். தேவை இருக்கும்பட்சத்தில் கூடுதல் கண்காணிப்பாளர்களும் அழைக்கப்படுவார்கள்.

Related Stories: