தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 3 படகுகளில் மஞ்சள், பீடி இலை, ஏலக்காய் கடத்தல்: கொரோனா அச்சத்தால் பிடிபட்டவர்கள் விடுவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து படகில் கடந்த ஏப்.27ம் தேதி இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட 2,780 கிலோ விரளி மஞ்சள், 93 பைகளில் பேக் செய்யப்பட்ட 378 கிலோ ஏலக்காய், மல்லி விதை, சோப், எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் தூத்துக்குடியில் இருந்து படகில் கடத்தப்பட்ட 2790 கிலோ விரளி மஞ்சள், 803 கிலோ ஏலக்காய் ஆகியவை பிடிபட்டுள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இதேபோல் 29ம் தேதி 1100 கிலோ பீடி இலையுடன் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்துள்ளது. பொருட்களை இலங்கை காவல்துறையிடம் அந்நாட்டு கடற்படை ஒப்படைத்துள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா 2ம் அலை வேகம் எடுத்துள்ளதால் ஏற்பட்ட பீதி காரணமாக கைதானவர்களை மருத்துவ சோதனைக்கு உட்படுத்திய இலங்கை கடற்படை, அரசின் உத்தரவுப்படி படகுகளை கொடுத்து திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

Related Stories: