சொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை: உறவினர்களுக்கு வலை

பெரம்பூர்: பேசின்பிரிட்ஜ் குமாரசாமி ராஜாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி சாலம்மாள். இவர்களுக்கு தட்சிணாமூர்த்தி, சாந்தமூர்த்தி, ராமமூர்த்தி, சிகாமணி, ராமலிங்கம், வாசுகி, ஆனந்தி என 5 ஆண் பிள்ளைகள் மற்றும்  2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களில் சாந்தமூர்த்தி மட்டும் இறந்துவிட்ட நிலையில் மற்ற 6 பிள்ளைகளுக்குமிடையே பூர்வீக சொத்தை பிரிப்பதில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நுங்கம்பாக்கம், காமராஜபுரத்தை சேர்ந்த வாசுகி(55), அவரது கணவர் மோகன்(68) ஆகியோர் நேற்று மாலை பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள தங்களது அண்ணன் ராமலிங்கம் வீட்டிற்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக வந்தனர். அப்போது மற்றொரு அண்ணன் சிகாமணி, அவரது குடும்பத்தினர்களான மேரி, தமிழ்ச்செல்வன், சுபா, சதீஷ்குமார் ஆகியோர் மோகன், வாசுகியிடம் தகராறு செய்து மோகனையும், வாசுகியையும் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மோகன் உயிரிழந்தார். வாசுகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் பேசின்பிரிட்ஜ் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: