வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காங்கயம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக பேனர் வைத்ததால் பரபரப்பு

காங்கயம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது.  திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி என காங்கயம் தொகுதிக்குட்பட்ட பழையகோட்டை  பகுதியில் அதிமுகவினர் பிளக்ஸ் வைத்துள்ளனர். அதில் 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம், உடனடியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேனரை அகற்றகோரியதுடன், அவருடைய முகநூல் பக்கத்திலும் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் இது போன்ற சம்பவங்கள் தேர்தல் விதிகளுக்கு எதிரானது. கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிளக்ஸ் வைத்த சில மணி நேரங்களில் அது அகற்றப்பட்டது. இதுகுறித்து ஏ.எஸ்.ராமலிங்கம் கூறும்போது, ‘‘பிளக்ஸ் யார் வைத்தார்கள்? என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்தார்.

Related Stories: