கொரோனா பரவலை தடுக்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடல்

ஆண்டிபட்டி: கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 2 ஆயிரம் புறநோயாளிகள் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், மருந்து, மாத்திரை வாங்கவும் தினசரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நேற்று மூடப்பட்டது. இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும்வரை புறநோயாளிகள் சிகிச்சைக்கு வரவேண்டாம். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எப்போதும் போல வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் எப்போதும் பிஸியாக காணப்படும் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Related Stories: