தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா 2ம் அலை!: டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு..!!

மதுரை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக இருப்பதால் மதுக்கடைகளை முழுவதுமாக மூடக்கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டிருக்கின்றது. மனுவாக தாக்கல் செய்தால் நாளையே விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தரப்பில் அவரது வழக்கறிஞர் நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி முன்பாக  முறையீட்டை முன்வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. 

தினந்தோறும் ஏராளமான மக்கள் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது, கொரோனா வேகமெடுத்துள்ளதால் வழிபாட்டு கூட்டங்கள், பொது கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மதுகடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் மிக அதிக அளவில் பரவ வாய்ப்பிருக்கிறது. 

ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள் இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்யவும், நாளை விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். 

Related Stories: