குளத்தூர் அருகே கொடூரம் மகளின் காதலுக்கு ஆதரவாக இருந்த மனைவி கொன்று எரிப்பு: கணவருக்கு வலை

குளத்தூர்: குளத்தூர் அருகே மகள் காதலுக்கு உடந்தையாக இருந்ததால்  மனைவியை கணவரே அடித்துக் கொன்று உடலை எரித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே தெற்கு கல்மேடு கிராமத்தில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையோர காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம்  35 வயது மதிக்கத்தக்க பெண்,  உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தருவைகுளம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பெண்ணை அடித்துக் கொலை செய்து அருகிலிருந்த முட்புதருக்குள் இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளதும், உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி கிடந்ததும் தெரிய வந்தது. தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை  பாா்வையிட்டு விசாரணை நடத்தினார்.  இதில் எரித்து கொலை செய்யப்பட்டவர், தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்த முனியசாமி மனைவி முருகலட்சுமி(38) என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர்  முனியசாமி(42). இவரது மனைவி முருகலட்சுமி(38).

இவர்களுக்கு வெங்கடேஸ்வரி உள்பட 3 மகள்கள். வெங்கடேஸ்வரிக்கு பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதற்கு முனியசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவரது தாய் சுப்புலெட்சுமி, மனைவி முருகலட்சுமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக வீரவநல்லூர் காவல்நிலையத்தில்  இருதரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இதில் காதல் திருமணத்திற்கு ஆதரவாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மகளின் காதல் திருமணத்திற்கு மனைவி முருகலட்சுமி ஆதரவாக இருந்ததால் அவர் மீது முனியசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு முனியசாமி, மனைவி முருகலட்சுமியை குளத்தூர் அருகில் உள்ள துரைசாமியாபுரத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார்.  கல்மேடு காட்டுப்பகுதியில் அவரை அடித்து கொலை செய்து பின்னர் உடலை பெட்ேரால் ஊற்றி எரித்துள்ளார் என தெரியவந்தது. தலைமறைவான முனியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: