புதிய கல்விக் கொள்கை குறித்த ஆவணம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியீடு..! தமிழ் மொழி புறக்கணிப்பு

சென்னை: தேசிய கல்விக்கொள்கையின் மாநில மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டது. இதில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கல்விக் கொள்கையில் கடந்த 34 ஆண்டுகளாக மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.  

புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசிடம்  2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. எனினும், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு மொழிபெயர்க்கப்பட்டது.

ஆனால் மாநில மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, காஷ்மீரி, கொங்கணி,  மணிப்புரி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்து உள்ளூர் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் தமிழ் மொழி  மட்டும் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: