அரியலூர்: அரியலூரில் பழமையான ஆலமரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அரியலூரில் இருந்து பொய்யூர் செல்லும் சாலையில் பள்ளக்கிருஷ்ணாபுரம் அருகே சாலையோரம் 25 ஆண்டு கால பழமையான ஆலமரம் உள்ளது.இந்த ஆலமரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வசித்து வந்தன. மேலும் இச்சாலை வழியே செல்லும் மக்கள் இளைப்பாறுவதற்கும் இந்த ஆலமரமானது பயன்பட்டு வந்தது. இந்நிலையில் உயரழுத்த மின்சாரபாதை செல்வதற்காக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மின்சாரத்துறையினர் அம்மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அப்துல்கலாம் இளைஞர் மன்றத்தை சார்ந்த இளைஞர்கள் மரத்தை வெட்டக் கூடாது எனக் கூறி மரத்தின் முன்பு அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.