கம்பம்: கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாததால் தமிழக தோட்ட தொழிலாளர்களை, கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். தேனி மாவட்ட எல்லையான கம்பம்மெட்டு, போடிமெட்டு பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழக தொழிலாளர்கள் 6 மாத கால இ-பாஸ் பெற்று, கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். தற்போது இ-பாசுடன், கொரோனா பரிசோதனை சான்றிதழும் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறி, நேற்று காலை தமிழக தோட்ட தொழிலாளர்களை, கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், கம்பம்மெட்டு சாலை சிலுவைக்கோவில் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.