டெல்லி : பிரதமர் மோடியின் உரையில் நிவாரணம் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகள் என முக்கிய அம்சங்கள் ஏதும் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில், வெற்றுப் பேச்சு என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஊரடங்கு என்பது மாநிலங்களின் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார். இதனால் முழு ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வராத பல்வேறு தரப்பினும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் பிரதமரின் கூற்றுக்கு மாறாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டு வருவதாக மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் கூறியுள்ளார். பிரதமர் நிவாரணம் அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்கள், சிறு வணிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று மோடி அறிவிப்பார் என எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றம் அடைந்ததாக சத்தீஸ்கர் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பி[பினராயி விஜயன், மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மேலும் பிரதமர் மோடியின் உரை வெற்று பேச்சு என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தனது அனைத்து பொறுப்புகளையும் கைவிட்டு உள்ளதாக சாட்டியுள்ளது. இந்தியாவை காப்பாற்றுவதற்கான பொறுப்பை தன்னார்வ நிறுவனங்கள் இளைஞர்களின் தலை மீது மோடி வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வேறு வழியின்றி ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கை அமல்படுத்துவதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் மாநிலங்கள் தற்போது ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தும் பொறுப்பு பிரதமர் மோடியிடம் இருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.