காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா உறுதி: விரைந்து குணமடைய பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!!!!

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி குணமடைய பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய  தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், லேசான அறிகுறிகள் இருந்த நிலையில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களவை உறுப்பினர் ஸ்ரீ.ராகுல் காந்தி நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான சகோதரர் ராகுல் காந்தி முழு ஆரோக்கியத்துடன் விரைவாக குணமடைய விரும்புகிறேன். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: