நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி.!!!

டெல்லி: மே 1-ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை  கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத்  தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த அபாயகரமான சூழலில் நமக்குள்ள ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பது சமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கிடையே,  கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று காலை சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மாலை 6 மணயளவில் நாட்டில் உள்ள சிறந்த மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில்,  வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர், முன்கள பணியாளர்கள், 45 வயது மேற்பட்டோர் தொடர்ந்து, 3வது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன்,  அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: