தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது கொரோனா பரவல்; சென்னையில் கொரோனா மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை: அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் பிடியில் சென்னை மாநகரம் சிக்கி தவிக்கிறது. தலைநகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் இரவு பகலாக காத்து கிடைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினமும் புதிய கண்டு வருகிறது தமிழகம். ஆரம்பத்தில் இருந்த கொரோனா பரவலில் முதலிடத்தில் வகிக்கும் சென்னை மாநகரை தொற்றின் இரண்டாவது அலை முடக்கிப்போடும் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உள்பட சுமார் 25,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ஓமந்தூரார் மற்றும் கிண்டி கிங்ஸ் அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக பிரிவுகள் செயல்படுகின்றன. ஆனால் தற்போதைய சூழலை எதிர்கொள்ளும் அளவுக்கு படுக்கைகளின் எண்ணிக்கை இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் வெறும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 750 படுக்கைகள் மட்டுமே கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் உள்ளது. ஆனால் தினமும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி துற்றுக்கணக்கானோர் அங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.படுக்கை பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் பலர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

ஏற்கனவே படுக்கையில் உள்ள நோயாளிகள் வீடு திரும்பினாள் மட்டுமே காத்திருக்கும் சிலருக்கு படுக்கை கிடைக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 750 படுக்கைகளை கொண்ட ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நிலமையும் இப்படி தான் இருக்கிறது. அங்கு வரும் கொரோனா நோயாளிகள் பலரும் மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1900 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 1,200 படுக்கைகளும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 220 படுக்கைகளும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உள்ளன.

ஆனால் இந்த மருத்துவமனைகளிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா சிகிச்சைக்கு குவிகின்றனர். படுக்கைகள் தட்டுப்பாட்டால் பலர் கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் வீட்டு தனிமைக்கும் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருப்போர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால் தான் படுக்கை தர இயலும் என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பும் சூழலே பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலவுகிறது. இதனால் மருத்துவமனை வளாகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் காத்துக்கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டு தனிமைக்கு மருத்துவமனைகள் பரிந்துரைத்து அனுப்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது.

இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் என பக்க நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே போர்க்கால அடிப்படியில் அதிக அளவில் முழுமையான மருத்துவ வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை திறக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. குஜராத், மத்திய பிரதேசம் போல், தமிழகத்திலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகி உள்ளது.

Related Stories: