கேரளாவுக்கு ரயிலில் கடத்திய 36.50 லட்ச ரூபாய் சிக்கியது

பாலக்காடு: சென்னை-மங்களூர் சூப்பர் பாஸ்ட் ரயிலில் உரிய ஆவணம் இன்றி ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பாலக்காடு ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஹவாலா பணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்த பாரிக்குட்டி (69) என்பவர் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் சூப்பர் பாஸ்ட் ரயிலில் திரூருக்கு டிக்கெட் எடுத்து பயணித்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் ரயில் பாலக்காடு வந்தது. அப்போது ரயில்வே போலீசார் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர்.

அப்போது பாரிக்குட்டி கொண்டு வந்த பைகளில் கட்டுக்கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அவர் வைத்திருந்தார். பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாத நிலையில் பணத்தை பறிமுதல் செய்ததோடு, பாரிக்குட்டியை கைது செய்தனர். அவர் கொண்டு சென்றது ஹவாலா பணமா என்பது குறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: